செய்திகள்
கோப்பு படம்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்வு

Published On 2021-04-10 11:37 GMT   |   Update On 2021-04-10 11:37 GMT
வேலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 355 பேர் இறந்துள்ளனர். கடந்த மாதம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது அதிவேகத்தில் பரவுகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் பரவல் மக்களிடையே அதிகமாகவே உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. அதன்படி ஒரு பகுதியில் 3 பேருக்கு மேல் கொரோனா பாதித்தால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராத தொகையை அதிகப்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முககவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை மறித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக 50 முதல் 70 வரை பாதிப்பு இருந்து வந்தது. நேற்று வெளியான முடிவில் ஒரேநாளில் 2 மடங்கு உயர்ந்து 137 பேருக்கு தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலூர் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். மேலும் பலர் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவல் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறைந்தது. அக்டோபர் 16-ந் தேதி 100 பேரை தாண்டி கொரோனா பரவல் இருந்தது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு தற்போது 100 பேரை தாண்டி பாதிப்பு எண்ணிக்கை 137 ஆக பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News