செய்திகள்
தற்கொலை

நூலக கழிப்பறையில் ஆசிரியை தற்கொலை- போலீஸ் விசாரணை

Published On 2021-04-02 16:40 IST   |   Update On 2021-04-02 16:40:00 IST
நூலக கழிப்பறையில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செவிடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜன். இவருடைய மனைவி பவானி(வயது 28). கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் பவானி கடந்த மாதம் 30-ந் தேதி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 5 மணியளவில் கூடலூர் கிளை நூலகத்தின் கழிப்பறையில் ஒரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதாக கூடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அது காணாமல் போன பவானி என்பது தெரியவந்தது. பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் அவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நூலக கழிப்பறையில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News