செய்திகள்
விருத்தாசலத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்

விருத்தாசலத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

Published On 2021-03-29 22:30 IST   |   Update On 2021-03-29 22:30:00 IST
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
விருத்தாசலம்:

ஏசு கிறிஸ்து உயிர்த் தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டுக்கான பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலம் நகரத்துக்குள் கழுதை குட்டி மேல் அமர்ந்து வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்ற வாழ்த்து பாடல்களை பாடினர்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்களால் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயம் அருகே கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்திற்கு சென்றனர். அதனை தொடர்ந்து அங்கு பங்குதந்தை பால்ராஜக்குமார் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News