செய்திகள்
கோப்புபடம்

குடும்ப தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பலி

Published On 2021-03-27 16:54 IST   |   Update On 2021-03-27 18:48:00 IST
பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற எலக்ட்ரீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் சதா (வயது 32) எலெக்ட்ரீஷியன். பெங்களூவில் தங்கி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (30). இவர்கள் இருவரும் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். நேமிகா (10) என்ற மகளும், தர்ஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர்.

சதா பெங்களூருவிலிருந்து கடந்த 23-ந் தேதி வந்து தனது மகள் நேமிகா பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சதா மது அருந்திவிட்டு மனைவி மல்லிகாவுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மல்லிகா, விவசாய நிலத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த கணவன் சதா மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மல்லிகாவுக்கு ஓரளவு நீச்சல் தெரிந்ததால் கிணற்றிலுள்ள கல்லை பிடித்து தத்தளித்தார். ஆனால் அவரை காப்பாற்ற குதித்த கணவன் சதா தண்ணீரில் மூழ்கினார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கணவன், மனைவி இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அப்போது சதா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மல்லிகா சிகிச்சைபெற்று வருகிறார்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கேசவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News