செய்திகள்
பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி கைது
பண்ருட்டி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். இதை பார்த்த ராஜேந்திரன், சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அவர் சிறுமியின் கன்னத்தில் அடித்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பண்ருட்டி, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்