திருவண்ணாமலை அருகே சென்னை பஸ்சை நடுவழியில் நிறுத்தி பறக்கும்படை சோதனை
வேட்டவலம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் வாக்களிக்க பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைத்து அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே தானிபூண்டி பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை வந்த பஸ்சை நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரிடம் இருந்து ரூ.90 ஆயிரமும், சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரை சேர்ந்த தீனதயாளன் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றி பறக்கும் படை அலுவலர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:-
உரிய ஆவணம் இல்லாமல் பணத்தை கொண்டு சென்றதால் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.