செய்திகள்
ராகுல் காந்தி வரவால் மக்களிடையே எழுச்சி- அமைச்சர் கந்தசாமி பேச்சு
ராகுல்காந்தி வரவால் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
பாகூர்:
ஏம்பலம் தொகுதி சேலியமேடு கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய கட்டிடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் பல்நோக்கு கைவினை பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் உதயகுமார் தலைமை தாங்கினார். இயக்குனர் யஷ்வந்தையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் கந்தசாமி, ‘புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டது தமிழுக்கு கிடைத்த பெருமை. ராகுல்காந்தி வரவால் கட்சி நிர்வாகிகள், மக்களிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வெற்றி நிச்சயம்’ என்றார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுகந்தி, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர், கைவினைக் கலைஞர் முனுசாமி, பயிற்சியாளர் அமலாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.