செய்திகள்
கூட்டத்தில் நீதிபதி ஜோதிமணி பேசிய போது எடுத்த படம்.

சுற்றுச்சூழல் மாசு தான் கொரோனா பரவ காரணமாக இருந்தது - நீதிபதி ஜோதிமணி பேச்சு

Published On 2021-02-15 18:41 IST   |   Update On 2021-02-15 18:41:00 IST
சுற்றுச்சூழல் மாசு தான் கொரோனா பரவ காரணமாக இருந்தது என நீதிபதி ஜோதிமணி கூறினார்.
சிவகாசி:

சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில் கிராமப்புற தொழில் முனைவோர் சுவச்சிதா கிராமப்புற மேம்பாட்டு கழகத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். பேராசிரியை சைலஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினரை நுண்ணுயிரியல்துறை தலைவர் ரஞ்சனி அறிமுகம் செய்து வைத்தார். இதில் நீதிபதி ஜோதி மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பல இடங்களில் சுற்றுச்சூழல் மாசு உள்ளது.

பொதுசுகாதாரம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதனால் தான் கொரோனா பரவல் வேகமாக இருந்தது.

ஆனால் தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. முடிந்த வரை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஒரு சராசரி மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தான். ஆனால் தற்போது 40 வயதுக்குள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு உணவு பழக்கத்தை மாற்றியது தான் காரணம். இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும்.

வேதிப்பொருட்கள் உள்ள உணவுகளால் உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் சிவகாசி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவிபேராசிரியர் பவித்ரா நன்றி கூறினார். இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News