செய்திகள்
கைது

அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்- 127 பேர் கைது

Published On 2021-02-04 21:47 IST   |   Update On 2021-02-04 21:47:00 IST
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.

பல்வேறு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 79 பெண்கள் உள்பட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News