செய்திகள்
திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு வேட்டவலம் சாலை கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வரவில்லை என்றும், குடிநீரில் கால்வாய் நீர் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலிக்குடங்களுடன் கீழாத்தூர் - வேட்டவலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேசன் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.