செய்திகள்
நகை திருட்டு

ஆரணி அருகே திருமண வீட்டில் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு

Published On 2021-01-28 09:32 GMT   |   Update On 2021-01-28 09:32 GMT
ஆரணி அருகே திருமண வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 35 பவுன் நகையைத் திருடிச் சென்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணிபாலன் (வயது 50), விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர். மகள் சவுமியாவுக்கும், சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் நேற்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்காக தரணிபாலன், அப்பகுதியைச் சேர்ந்தவர்களையும், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் சென்னைக்குச் சென்று விட்டார். திருமணம் முடிந்து நேற்று வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் கதவும், அறைகளில் வைத்திருந்த பீரோக்களும் திறந்திருந்தது. அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

அதிர்ச்சி அடைந்த அவர், உடனே ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், தரணிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

வீட்டின் பீரோக்களில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவைகளும், மணப்பெண் சவுமியாவுக்கு சீர்வரிசையாக வழங்க வைத்திருந்த தங்க நகைகளும் என மொத்தம் 35 பவுன் நகைகள் திருட்டுப்போய் இருந்தது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News