செய்திகள்
விபத்து

புவனகிரி அருகே டிராக்டர் மோதி ஆசிரியை பலி

Published On 2021-01-23 03:51 GMT   |   Update On 2021-01-23 03:51 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே டிராக்டர் மோதிய விபத்தில் ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி:

புவனகிரி அருகே உள்ள தம்பிக்கு நல்லான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 36). ஆசிரியையான இவர், புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு வர்ஷினி (8) என்ற மகளும், விஷ்ணுவர்தன் (6) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி, தனது மகள் வர்ஷினியுடன் ஸ்கூட்டரில் புவனகிரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டார். பள்ளிக்கூடம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் வர்ஷினி காயமடைந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த வர்ஷினி சிகிச்சைக்காக புவனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News