செய்திகள்
கொள்ளை

கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை- பணம் திருட்டு

Published On 2021-01-17 04:10 GMT   |   Update On 2021-01-17 04:10 GMT
கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூர் குயவர் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் வீரமுத்து (வயது24).இவர் சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விஜயலட்சுமி திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். இரவில் வீரமுத்து நாகைக்கு சினிமா பார்த்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்த இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். நாகையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News