செய்திகள் (Tamil News)
நாகையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர், குடியிருப்பு பகுதியில் ஓடியதால் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
நாகையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் ஓடியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை நகராட்சிக்கு உட்பட்ட பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் நேற்று பாதாள சாக்கடையில் கழிவு நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடியது.
இதுகுறித்து நகராட்சிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக கழிவு நீர் அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் மறியலை கைவிட்டு ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.