செய்திகள்
பழுதடைந்துள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை படத்தில் காணலாம்.

பழுதடைந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்- அரசுக்கு கோரிக்கை

Published On 2021-01-04 13:43 IST   |   Update On 2021-01-04 13:43:00 IST
வேதாரண்யத்தில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு வருவதால் பழுதடைந்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம்- நாகை சாலையில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது. வேதாரண்யம் வட்டாரத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளிட்டவைகளுக்கு தலைமை அலுவலகம் இதுதான். இந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் 14 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த அலுவலகம் அருகே உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. பின்னர் சேதுசாலையில் புதிதாக கட்டப்பட்ட புயல் பாதுகாப்பு கட்டிடத்தில் இயங்கி வந்தது.

தற்போது வேதாரண்யம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News