செய்திகள்
நாகூர் பட்டினச்சேரி கடற்கரையை படத்தில் காணலாம்.

நாகூர் பட்டினச்சேரியில் கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம்- தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

Published On 2020-12-24 16:13 IST   |   Update On 2020-12-24 16:13:00 IST
நாகூர் பட்டினச்சேரியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர்:

நாகையை அடுத்த நாகூரில் பட்டினச்சேரி மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள கடற்கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் கடல் நீர் ஊருக்குள் புகுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு ஊருக்குள் புகும் கடல்நீர் பல தென்னை மரங்களை் சாய்த்து வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கடல் நீர் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஊருக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

கடலுக்கும், மக்கள் குடியிருப்பு பகுதிக்கும் இடையேயான தொலைவு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. இதனால் பட்டிச்சேரிக்குள் கடல் நீர் புகாதபடி கடற்கரையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

பட்டினச்சேரிக்குள் கடல் நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. சில சமயங்களில் புயல் எச்சரிக்கை அறிவித்த நிலையிலும், தொடர்ந்து கனமழை பெய்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டினச்சேரி கடற்கரையோரம் தடுப்பு சுவர்கள் அமைத்து கடல் நீர் உட்புகுவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News