செய்திகள்
கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

Published On 2020-12-21 02:20 GMT   |   Update On 2020-12-21 02:20 GMT
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான விசைப்படகு, நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். சமீபத்தில் உருவான புரெவி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன்பேரில், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தற்போது நிலைமை சீரடைந்து உள்ளதால் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் 273 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சைமன் மகன் கான்ஸ்டன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (38), பாண்டு (50), மோகன் (44) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர்.

மேலும், அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News