செய்திகள்
சித்ரா

கொரோனா ஊரடங்கால் காதலில் விழுந்த சித்ரா

Published On 2020-12-13 11:22 IST   |   Update On 2020-12-13 11:22:00 IST
கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடிகை சித்ராவின் தற்கொலை அவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டி.வி. தொகுப்பாளராக தனது பணியை தொடங்கிய சித்ரா, நாடகத்தில் முல்லையாக மக்கள் மனங்களில் உலா வந்து உதிர்ந்துள்ளார்.

நடிகை சித்ரா மே 2-ந்தேதி 1992-ம் ஆண்டு வேலூரில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது தாத்தா ராணுவத்தில் பணியாற்றியவர். சித்ராவின் அண்ணன் சென்னை அண்ணாநகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். சித்ரா உளவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

எனினும் ஊடகத்துறை மீதான ஆர்வம் காரணமாக 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சி பணிக்கு சேர்ந்து தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

பின்னர் இவர் மன்னன் மகள், சின்ன பாப்பா, பெரிய பாப்பா, சரவணன் மீனாட்சி-2, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது இவர் நடித்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மேலும் நடிகர்களின் உள்ளத்தில் உச்சத்தில் அமர்ந்தார்.

இந்த நிலையில் சித்ரா ஈ.சி.ஆர். சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மெண்டில் தங்கி இருந்தார்.

அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் தான் ஹேம்நாத் தங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் இன்றி வீட்டில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையே  அப்போது தான் காதல் மலர்ந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் எளிமையான முறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து ஜனவரியில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் அக்டோபர் 19-ந் தேதியே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு சித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Similar News