செய்திகள்
அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டபோது எடுத்த படம்.

விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Published On 2020-12-04 14:29 GMT   |   Update On 2020-12-04 14:29 GMT
ஜெயங்கொண்டம் அருகே விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். இவர் கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி உட்கோட்டை பிரிவு சாலையில், சைக்கிளில் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியாக கும்பகோணம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது குறித்த விசாரணை ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த கொளஞ்சிநாதன் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சத்து 92 ஆயிரத்து 601 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படாததால் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று தஞ்சாவூரில் இருந்து சென்னை நோக்கி 35 பயணிகளுடன் சென்ற அரசு விரைவு பஸ்சை சின்னவளையம் அரசு பள்ளி அருகே நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர் மழை பெய்து வரும் நிலையில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ்சை ஜப்தி செய்ததால், மாற்று பஸ் இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News