செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை

Published On 2020-12-03 10:54 GMT   |   Update On 2020-12-03 10:54 GMT
ஈரோட்டில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு சாஸ்திரிநகர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி. இவரும், உறவுக்கார பெண்ணான சவுந்தர்யா (23) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையின்போது மணிகண்டன் தனது மனைவி, அம்மா, தம்பி ஆகியோருக்கு புதிய துணிகளை வாங்கி கொடுத்து உள்ளார். ஆனால் அவருக்கு எந்தவொரு துணியும் வாங்கி கொள்ளவில்லை. இதனால் சவுந்தர்யா புதிய துணிகளை வாங்கி கொள்ளுமாறு பலமுறை கூறிஉள்ளார். ஆனால் அவர் புதிய துணி வாங்காததால், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

மேலும், காதல் திருமணம் செய்து கொண்டதால் தீபாவளி பண்டிகைக்கு சவுந்தர்யாவை அவரது தாய் வீட்டில் இருந்து அழைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சவுந்தர்யா கடந்த 13-ந் தேதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் மணிகண்டன் வாடினார். அவரால் மனைவியை மறக்க முடியாமல் தாய், தம்பி, நண்பர்களிடம் புலம்பி உள்ளார். மனைவியின் நினைவிலேயே இருந்து வந்த மணிகண்டனும் தனது வாழ்வை முடித்து கொள்ளும் முடிவுக்கு வந்தார்.

நேற்று முன்தினம் பகலில் குளியலறைக்குள் சென்ற மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த குடும்பத்தினர் மணிகண்டன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் கணவனும் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News