செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள கைபாலி தோட்டம் மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 66). இவருடைய மனைவி குஞ்சம்மாள். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். விவசாய தொழிலாளியான குருசாமி தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற குருசாமி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் இவருடைய உறவினர்கள் பல இடங்களில் அவரை தேடிப்பார்த்தார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை மைக்கேல் பாளையம் அருகே உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு நிலை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிணற்றில் மிதந்த பிணத்தை மீட்டு மேலே கொண்டுவந்தார்கள்.
இதைத்தொடர்ந்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கிணற்றில் இறந்து மிதந்தது மாயமான குருசாமி என்பதும், அவர் மதுபோதையில் நடந்து சென்றபோது தடுமாறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.