செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
புதுக்கோட்டை:
தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது உண்டு. பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகத்தில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வந்து செல்லும் வகையில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல புதுக்கோட்டையில் இருந்து வெளியூர்ளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து புதுக்கோட்டை வரவும், புதுக்கோட்டை வந்த பின் அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு பயணிகள் செல்லும் வகையில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் செல்லவும் வருகிற 11-ந் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த பின் மீண்டும் ஊருக்கு பொதுமக்கள் பயணம் செய்யும்வகையில் வருகிற 14-ந் தேதி மாலைக்கு பிறகு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வருகிற 17-ந் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் சேவை உண்டு. பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் மற்றும் தேவைகளை பொறுத்து உடனுக்குடன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.