செய்திகள்
அஞ்செட்டி அருகே கஞ்சா பயிரிட்ட 2 விவசாயிகள் கைது
அஞ்செட்டி அருகே கஞ்சா பயிரிட்ட 2 விவசாயிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் அட்டப்பள்ளம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அங்கமுத்து (வயது 60), கோவிந்தன் (35) ஆகிய 2 பேரும் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் சோளம், ராகி பயிர்களுக்கு இடையே கஞ்சா ஊடுபயிராக பயிரிட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் கஞ்சா விற்ற தேன்கனிக்கோட்டை படேல் தெருவை சேர்ந்த மாரியப்பன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். தளி போலீசார் அகலக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற அதே ஊரை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) என்பவரை கைது செய்தனர். ஊத்தங்கரை போலீசார், கஞ்சா விற்றதாக கதவணையை சேர்ந்த முத்து (24) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.