செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பிக்க வழிகாட்ட வேண்டும்- பெற்றோர்கள் வேண்டுகோள்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பிக்க வழிகாட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கீரமங்கலம்:
மருத்துவப்படிப்பு படிப்பதற்கு பிளஸ்-2 முடித்த பிறகு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தமிழ்நாட்டில் அதிகமான இடங்கள் இருந்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க செல்ல முடியாத நிலையில் தற்போது 7.5 சதவீதம் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 303 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள கிராமப்புற மாணவர்கள் தற்போது மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 3-ந் தேதி முதல் ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றி தெரியாமல் திணறி வருகின்றனர். விண்ணப்பத்தில் சிறு தவறு இருந்தாலும் நிராகரிக்கப்படும் நிலை உள்ளதால், மாவட்ட கல்வித்துறை மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய வழிகாட்ட வேண்டும் என்று பெற்றோர் கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆகவே விரைவாக கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியாக அனுப்பலாம்.