செய்திகள்
கோப்புபடம்

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Published On 2020-11-05 17:38 IST   |   Update On 2020-11-05 17:38:00 IST
கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பசவராஜ் தலைமை தாங்கினாார். நிர்வாகிகள் சதீஷ்கமார், துரை, சரவணன், கண்ணையா, கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்ரமேஷ் வரவேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் கருணாநிதி, சவுந்திரராஜன், சரவணன், தாவித் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது, மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. மின் திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவியை பறிக்க கூடாது. துணை மின்நிலையங்களையும், பகிர்மானங்களையும், பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலைவாய்ப்புகளையும் பறிக்க கூடாது.

கொரோனா காலத்தில் உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்திடும் அரசாணையை மின்வாரியத்தில் அமலாக்க வேண்டும். மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்புக்கான தொகை மற்றும் அகவிலைப்படியை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

இந்த தர்ணா போராட்டத்தில் மின் வாரிய ஊழியர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News