செய்திகள்
ஓசூரில் மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஓசூரில் மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் அட்கோ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். மாநகராட்சி ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கல்லாவியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர், நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.75 ஆயிரம், 1 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓசூர் போலீசில் புகார் செய்தார்.
இதேபகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், கிருஷ்ணன், விக்னேஷ். இவர்கள் தங்களது வீட்டு வாசல் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். இந்த 3 மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது. இதுகுறித்து அவர்கள் 3 பேரும் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.