செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.10½ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னை விமானநிலையம் வந்திறங்கிய சிறப்பு விமான நிலையத்தில் கடத்தப்பட்ட ரூ.10½ லட்சம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் விமானங்களில் ரகசியமாக தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அதில், ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த சாகுல் அமீது (வயது 44) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் எதுவும் கிடைக்காததால், அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்திருந்த 230 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாகுல் அமீதிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.