செய்திகள்
உத்திரமேரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி
உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரமேரூர்:
சென்னை ஒரகடத்தை சேர்ந்தவர் பவித்ரா. இவர் நேற்று முன்தினம் உத்திரமேரூர் அடுத்த மருதம் கிராமத்தில் வசித்து வரும் தனது சகோதரி அம்முவின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனது மகன்கள் நவீன் குமார் (வயது 15), உமேஷ் (12) ஆகியோருடன் மருதம் கிராமத்திற்கு சென்றார்.
சாப்பிடுவதற்காக வாழை இலை எடுத்து வர நவீன்குமார் பின்புறமுள்ள தோட்டத்திற்கு சென்றான். அப்போது அங்குள்ள கிணற்றில் நவீன்குமார் தவறி விழுந்தான்.
சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் விழுந்த நவீன்குமாரை மீட்டு உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவீன்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார். சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.