செய்திகள்
கணவரை எரித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
ஈரோடு அருகே கணவரை எரித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (34). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து திவ்யா (11) என்கிற மகள் உள்ளாள். கணவரை பிரிந்த லட்சுமி சுதாகரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் சுதாகருக்கும், லட்சுமிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 19-ந் தேதி நள்ளிரவில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தூங்கி கொண்டிருந்த சுதாகரின் மீது லட்சுமி பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அங்கேயே உடல் கருகி சுதாகர் பரிதாபமாக இறந்தார். மேலும், லட்சுமியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு லட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சுதாகரை எரித்து கொன்றதாக லட்சுமியின் மீது வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.