செய்திகள்
மரணம்

சிறுபாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

Published On 2020-10-22 09:18 GMT   |   Update On 2020-10-22 09:18 GMT
சிறுபாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் இறந்தனர். 2 சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபாக்கம்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகே உள்ள காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்தவள் ஆறுமுகம் மகள் மேகலா(வயது 12). இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவள் கருப்பையா மகள் மனிஷா(12). தோழிகளான இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், அவர்கள் 2 பேரும் தங்களது வீட்டிலே இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மேகலாவும், மனிஷாவும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும், ஏரியில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீச்சல் தெரியாததால் மேகலாவும், மனிஷாவும் நீரில் மூழ்கினர்.

இந்த நிலையில் குளிக்க சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுமிகளின் ஆடைகள் மட்டும் வெளியே கிடந்ததால், அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஏரிக்குள் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுமிகள் 2 பேரையும் பிணமாக மீட்டனர். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News