செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

படப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளை

Published On 2020-10-20 09:06 GMT   |   Update On 2020-10-20 09:06 GMT
படப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள கீழ் படப்பை எஸ்.எஸ்.ஆர். அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 38). இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மோகனபிரியா, (32). கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேகனபிரியா குழந்தைகளுடன் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

சுரேஷ் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர சொந்த ஊருக்கு சுரேஷ் சென்றார். நேற்றுமுன்தினம் இரவு சுரேஷ் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டின் உள்ளே சென்று பீரோ லாக்கரை பார்த்த போது அதில் இருந்த ரூ.2¼ லட்சம், 1½ பவுன் நகை மற்றும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சுரேஷ் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

படப்பை ஆத்தனஞ்சேரி ராகவேந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்வாணன், (40) இவர் படப்பை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு படப்பை டேவிட் நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அங்கு இருந்த 2¼ பவுன் நகை, ரூ.1500 மற்றும் ஒரு மடிக்கணினி போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்வாணன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

படப்பை ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (58). இவர் ஓரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த எல்.இ.டி. டி.வி. திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து சந்திரசேகர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News