செய்திகள்
நகை தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
குருபரப்பள்ளி அருகே நகை தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 36). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்த அவர் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் கோடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் கோபி(31) அவரது ஆட்களுடன் வந்து சீட்டு பணம் கேட்டு தன்னை தாக்கி, எனது பெற்றோரை மிரட்டி கையெழுத்து வாங்கினார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டேன் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து குருபரப்பள்ளி போலீசார் சுரேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கோபி மற்றும் அவரது அடியாட்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நிதி நிறுவன உரிமையாளர் கோபி, அவரது அடியாட்களான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கமல் (30), கோடிப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.