செய்திகள்
விபத்து

பொய்கை மோட்டூரில் லாரி மீது மினிவேன் மோதல்- டிரைவர் பலி

Published On 2020-10-12 16:05 IST   |   Update On 2020-10-12 16:05:00 IST
பொய்கை மோட்டூரில் நின்ற கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 46). மினிவேன் டிரைவர். இவர் நேற்று சென்னையில் இருந்து மினி வேனில் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். மினிவேனை அவரே ஓட்டினார். கிளீனராக பார்த்திபன் (37) இருந்தார். அவர்களது மினிவேன் வேலூரை நெருங்கிக்கொண்டிருந்தது.

பொய்கை மோட்டூர் பகுதியில் வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மினிவேன் மோதியது. இதில் மின்வேனில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முஸ்தபா அபுதாகிர் என்ற டாக்டர் அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அவர் விபத்தை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, காயமடைந்த இருவருக்கும் முதலுதவி சிகிச்சையளித்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுந்தரம் இறந்து விட்டார். பார்த்திபன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News