செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-10-10 19:28 IST   |   Update On 2020-10-10 19:28:00 IST
இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில நிர்வாகி ஸ்ரீதர், ஓவியர் ஜெயசீலன், நகர துணைச் செயலாளர்கள் மகி, சரண்ராஜ், குமரேசன், ராஜா, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் உள்பட 14 பேர் மீது முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகளிரணி துணை செயலாளர் புஷ்பலதா தலைமை தாங்கினார். 

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முல்லைவேந்தன், திருமாறன், திருமார்பன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Similar News