செய்திகள்
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி -முருகன் வீடியோ காலில் பேசினர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன்- நளினி இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை பேசி வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இதற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிற கைதிகள் தங்கள் உறவினர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த சிறப்பு அனுமதி நளினி- முருகனுக்கு வழங்கப்படாததால் அவர்கள் சட்டப்போராட்டம் நடத்தினர். பின்னர் இருவரும் சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு செல்போன் மூலம் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மதியம் 15 நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசினர். அதில், நளினி விடுப்பு கேட்டு விண்ணப்பிப்பது தொடர்பாகவும், நளினி தன் தாயார் பத்மாவிடம் செல்போனில் பேசும் நேரத்தை அதிகப்படுத்த மனு அளிப்பது தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது.