செய்திகள்
விபத்து

ஊத்தங்கரை அருகே லாரி மோதி கணவன்-மனைவி பலி

Published On 2020-10-07 13:52 IST   |   Update On 2020-10-07 13:52:00 IST
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன்-மனைவி பலியானார்கள். விவசாயி படுகாயம் அடைந்தார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூன்றம்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). விவசாயி. இவருடைய மகன் குமார் (33). இவரது மனைவி லதா (30). இவர்கள் 3 பேரும் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் முன்றம்பட்டியில் இருந்து ஊத்தங்கரைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி சென்றார். குமாரும், அவரது மனைவி லதாவும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

அவர்கள் ஊத்தங்கரை அருகே சென்னப்பநாயக்கனூர் வேடியப்பன் கோவில் அருகில் சென்றபோது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிளின் மீது மோதியது. இதில் நிலைக்குலைந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது குமாரும், அவருடைய மனைவி லதாவும் சம்பவ இடத்திலேயே லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த விபத்தில் மோகன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News