செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - சந்தூரில் 10 நாட்கள் கடைகளை மூட வணிகர்கள் முடிவு

Published On 2020-10-06 14:47 IST   |   Update On 2020-10-06 14:47:00 IST
கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் சந்தூரில் நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்களுக்கு கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் சந்தூர். மா ஒட்டுச்செடி விற்பனையை பிரதான தொழிலாக கொண்டு மக்கள் வசித்து வருகின்றனர். இதற்காக 200-க்கும் மேற்பட்ட நர்சரிகளில் மா செடிகள் விற்பனை செய்யப்படுகிறது. மா செடிகள் வாங்க வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் நேரடியாக கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சந்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தனர். அவர்கள் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து வணிகர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து நாளை (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி நர்சரிகள் உட்பட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். தண்டோரா மற்றும் துண்டுபிரசுரங்கள் மூலம் காட்டாகரம் ஊராட்சி முழுவதும் அறிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறையினர் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். ஊராட்சியின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News