செய்திகள்
வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மழை- வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு

Published On 2020-10-01 08:01 GMT   |   Update On 2020-10-01 08:01 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது மழை பெய்ததின் காரணமாக 1,510 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 41.20 அடியாக இருந்தது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.10 அடியாக உயர்ந்து உள்ளது.

ஏரியில் நீர்மட்டம் தொடர்நது உயர்ந்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு குடி நீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன் தினம் வரை 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 69 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

வீராணம் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் உயர்த்தப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்த ஆண்டில் 8-வது முறையாக வீராணம் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News