செய்திகள்
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் - போக்சோ சட்டத்தில் கைது
நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). கொத்தனார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை அறிந்த ராஜேஷ், சிறுமி வீட்டிற்கு சென்று அங்கு தனியாக இருந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதில் சுயநினைவை இழந்த அந்த சிறுமியை, ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் இதுகுறித்து தங்கள் மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.