செய்திகள்
மரணம்

அறந்தாங்கி அருகே இடியுடன் கனமழை- மின்னல் தாக்கி விவசாயி பலி

Published On 2020-09-10 06:25 GMT   |   Update On 2020-09-10 06:25 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடியுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த மேல்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). சொந்தமாக செம்மறி ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி மனைவி பாப்பு (60). இவரும் ஆடு வளர்க்கிறார்.

நேற்று மதியம் ஆறுமுகமும், பாப்புவும் கருங்குடி கண்மாயில் தங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திடீரென்று ஆறுமுகம் மீது மின்னல் தாக்கியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

ஆறுமுகம் நின்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்றிருந்த பாப்பு படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் விஜயபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மெய்யழகு மனைவி முத்துலெட்சுமி (35). மகள்கள் மகேஸ்வரி (19), மஞ்சுளா (14). நேற்று மதியம் முத்துலெட்சுமி தனது 2 மகள்களுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் மீது மின்னல் தாக்கியது.

இதில் முத்துலெட்சுமி, மகேஸ்வரி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Tags:    

Similar News