செய்திகள்
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி

பண்ருட்டி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியை கொன்ற 6 பேர் கைது

Published On 2020-09-07 06:29 GMT   |   Update On 2020-09-07 06:29 GMT
பண்ருட்டி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நகர நிர்வாகியை அடித்துக்கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சாந்தகுமார் (வயது 22). சிற்பி வேலை செய்து வந்தார். மேலும் இவர் பண்ருட்டி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல்(25). சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சக்திவேலை கடந்த 2-ந்தேதி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தகுமார், அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்லூரி மாணவியின் அண்ணனான பெயிண்டர் ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாந்தகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை பண்ருட்டி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் தட்டாஞ்சாவடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தட்டாஞ்சாவடி விரைந்து சென்று, அங்கிருந்த ஞானவேல்(20), திருவதிகை சரநாராயண நகர் குமரன் என்கிற குணசேகரன் (20), திடீர்குப்பம் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (20), திருவதிகை மண்டப தெருவை சேர்ந்த கோவில் சிற்பி விஜயகுமார் (23), சரநாராயணநகர் பிரகாஷ் (19), சுண்ணாம்புகார தெரு பிரதீப் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News