செய்திகள்
கோப்புபடம்

பயணிகள் வருகை அதிகரிப்பு: மாவட்டத்தில் கூடுதலாக 25 பஸ்கள் இயக்கம் - அதிகாரி தகவல்

Published On 2020-09-03 12:34 IST   |   Update On 2020-09-03 12:34:00 IST
பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் கூடுதலாக 25 பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தமிழக அரசு வெளியிட்ட புதிய தளர்வுகளில் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து மாவட்டத்திற்குள் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்திற்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தது. சில பஸ்களில் 10 பேருக்கும் குறைவான நபர்களே பயணம் செய்ததை காண முடிந்தது. பஸ் நிலையங்களிலும் பயணிகள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் வருகை அதிகரித்தது.

பஸ்களிலும் கூட்டம் அதிகரித்தது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடித்து 24 பேர் மட்டுமே செல்ல அறிவுறுத்தப்பட்டதால், அனுமதிக்கப்பட்ட நபர்கள் சென்றனர். இது பற்றி போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் நாள் 300 பஸ்களை இயக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் 125 பஸ்களை தான் இயக்கினோம். ஆனால் இன்று (நேற்று) சில இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கூடுதலாக 25 பஸ்களை இயக்கினோம். குறிப்பாக கடலூர்- சிதம்பரம், சிதம்பரம்- கடலூர், கடலூர்-பண்ருட்டி, கடலூர்- விருத்தாசலம் வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப பஸ்களை தயார் செய்து வருகிறோம் என்றார்.

Similar News