செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

Published On 2020-08-29 15:12 IST   |   Update On 2020-08-29 15:12:00 IST
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படவில்லை. தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் சேர்க்கைக்காகவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்காகவும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும்.

நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு குறித்து முதல்-அமைச்சர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார். குழந்தை தொழிலாளர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் குழந்தைகள் கூடுதலாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரையிலும் சேர்க்கை நடைபெறும் என்பதால் கூடுதல் சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பிற்கும் 20 ஆயிரம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்க கோபி கலை கல்லூரி, அந்தியூர், தாளவாடி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News