செய்திகள்
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தின் கடல் பகுதியில் மணல் திட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் கடல் பகுதியை ஆழப்படுத்த வேண்டும்- மீனவர்கள் கோரிக்கை

Published On 2020-08-21 13:42 IST   |   Update On 2020-08-21 13:42:00 IST
ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டைப்பட்டினம்:

கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு அந்த இடம் மேடாகி விட்டது. மேலும், சில நேரங்களில் கடல் நீர் உள் வாங்குகிறது. இதனால், கரையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், இந்த மணல் திட்டு காரணமாக பிடித்து வரப்பட்ட மீன்களை மீன்பிடி தளத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல முடியாமல் நாட்டுப்படகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கரைக்கு வரும் நிலை உள்ளது.

கடல்நீர் அடிக்கடி உள்வாங்குவதால் மணல் திட்டு தெரிகிறது. இதனால், கடலுக்கு படகை செலுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். ஆகவே, ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடலை ஆழப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டை அகற்றி அந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News