செய்திகள்
தற்கொலை

தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

Published On 2020-08-08 10:27 GMT   |   Update On 2020-08-08 10:27 GMT
கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாகூர்:

கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அதியமான் (வயது 27). மீனவர். சென்னையைச் சேர்ந்த செம்பருத்தி என்ற சந்திரலேகா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் செம்பருத்தி, கணவருடன் நல்லவாடு பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

செம்பருத்தியின் தாயார் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து தாயாரைப் பார்க்க செம்பருத்தி விரும்பினார். இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மனைவியை அழைத்துச்செல்ல அதியமான் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சென்னை செல்லலாம் என்று அதியமான் தெரிவித்து இருந்தார். அதன்படி கடந்த 5-ந்தேதி பிறந்தநாளும் நடந்து முடிந்தது. ஆனால் அதன் பிறகும் மனைவியை சென்னைக்கு அழைத்துச்செல்லவில்லை. இதனால் மனமுடைந்த செம்பருத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் சென்னையில் உள்ள தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News