செய்திகள்
கொள்ளை

அரியலூர் அருகே கடையில் பணம்- நகை கொள்ளை

Published On 2020-07-29 07:03 GMT   |   Update On 2020-07-29 07:03 GMT
அரியலூர் அருகே கடையில் பணம்- நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவடிவேல்(வயது 48). இவர் தா.பழூரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்புறம் உள்ள கதவு உடைந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுந்தரவடிவேல் உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் 4½ கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. பின்னர் அவர் இதுகுறித்து உடனே தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News