செய்திகள்
கொரோனாவில் இருந்து குணமடைந்த போலீசாருக்கு வரவேற்பு
கொரோனாவில் இருந்து குணமடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மலர்தூவி இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா, தா.பழூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் சிங்காரவேல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் மலர்தூவி இசை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அவர்களுக்கு பூங்கொத்து, பழக்கூடை கொடுத்து வரவேற்றார். அப்போது அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, திருமேனி, துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.