செய்திகள்
வெட்டப்பட்ட தென்னை மரங்கள்

கீரமங்கலம் பகுதியில் புயலால் பாதித்த தென்னை மரங்களை வெட்டி விற்கும் விவசாயிகள்

Published On 2020-07-16 16:08 GMT   |   Update On 2020-07-16 16:08 GMT
கீரமங்கலம் பகுதியில் புயலால் பாதித்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால், பலத்த சேதம் ஏற்பட்டது. மா, பலா, தேக்கு, தென்னை, சந்தனம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து நின்றன.

அந்த மரங்கள் சில மாதங்களில் பலன் கொடுக்கும் என்று காத்திருந்த விவசாயிகள், அதற்கான இயற்கை உரங்கள், ரசாயன உரங்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சினர். ஆனால் அந்த மரங்கள் துளிர்கூட விடாமல் அப்படியே நிற்கின்றன. இதனால் மேலும் செலவுகள் செய்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்த விவசாயிகள் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை மரங்களை மொத்தம் மொத்தமாக வெட்டி அழித்து செங்கல் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, கொத்தமங்கலத்தில் ஒரு தோப்பில் காய்ந்த மரங்களை வெட்டிக் கொண்டிருந்த விவசாயி வளர்மதி கூறுகையில், என்னிடம் பெரிய தென்னந்தோப்பு இருந்தது. தென்னை மரங்களில் இருந்து ஒரு முறை தேங்காய் பறித்தால் ரூ.2 லட்சம் வரை விற்பனை ஆகும். ஆனால் புயலுக்கு பிறகு மரங்கள் காய்க்கவில்லை. செலவு மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. அதனால் தற்போது எனது தோப்பில் நிற்கும் 200 தென்னை மரங்களை வெட்டி வருகிறேன். அவற்றை சேலத்திற்கு செங்கல் சூளைகளுக்கு வாங்கிச் செல்கிறார்கள்.

அதாவது ஒரு மரத்தை வெட்டி அகற்ற ரூ.300 செலவாகிறது. ஆனால் ஒரு மரத்தை ரூ.250-க்கு வாங்கி செல்கிறார்கள். இதனால் ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.50 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மொத்த மரங்களையும் வெட்டி அகற்றிவிட்டு சிறு காய்கறி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதேபோல்தான் அனைத்து பகுதியிலும் புயலில் பாதித்த தென்னை மரங்கள் பலனின்றி நிற்கிறது, என்றார்.

Tags:    

Similar News