செய்திகள்
பணம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு

Published On 2020-06-20 16:33 IST   |   Update On 2020-06-20 16:33:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டை கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 47). ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புருஷோத்தமன் தன்னுடைய மகள் திருமணத்துக்கு தங்க நகை வாங்குவதற்காக ஸ்ரீபெரும்புதூர் காந்திரோட்டில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சத்தை எடுத்தார்.

அதை அவர் தனது மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள கடை அருகே மொபட்டை நிறுத்தி விட்டு ஜூஸ் குடித்தார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சம் மர்ம நபரால் திருடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Similar News