செய்திகள்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட காட்சி.

கடலூர் நகராட்சிப் பகுதியில் முகக்கவசம் அணியாத 230 பேருக்கு அபராதம்

Published On 2020-06-17 13:03 IST   |   Update On 2020-06-17 13:03:00 IST
கடலூர் நகராட்சிப் பகுதியில் முகக்கவசம் அணியாத 230 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர்:

கடலூர் நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது. நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வீடுதோறும் சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா? என்பதை சோதனை செய்து வருகிறார்கள். மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கைகளை சோப்புப் போட்டு நன்றாக கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். ஆனால், ஒருசிலர் இந்த விதிமுறைகளை மீறி சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

குறிப்பாக முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் அதிகாரிகள், போலீசாரைக் கொண்ட 11 குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் 45 வார்டுகளிலும் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாமல் வந்த 230 நபர்களை பிடித்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். மொத்தம் 230 பேரிடமிருந்து ரூ.23 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News